ஏமாற்றமே மிச்சம்:சஜித்!
நாட்டின் வாழ்வாதாரம் சீர்குலைந்து, பொருளாதாரம் வங்குரோத்தாகியுள்ள இந்நேரத்தில், சில தரப்பு ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரித்து வருகின்றனர் என்றும், வரவு செலவுத் திட்டத்திற்கும், VAT வரியை அதிகரிப்பதற்கும் ஆதரவாக வாக்களித்து விட்டு, ஜனாதிபதியை பாதுகாத்துக் கொண்டும், வரிச் சுமையை மக்களின் தோள்களில் சுமத்த வேண்டாம் என பின்னர் அறிக்கைகளை வெளியிடுவதே அண்மைய பெரும் நகைச்சுவையான விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
VAT வரியை அதிகரிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது நாட்டை வங்குரோத்தடையச் செய்த குடும்ப ஆட்சியின் ஒரு தரப்பினர் அதற்கு வாக்களிக்காமல், மக்கள் பக்கம் முன் நிற்பதாக பாசாங்கு செய்தாலும், தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்கள் VAT வரியை அதிகரிக்க ஆதரவாக வாக்களித்தனர் என்றும், நாட்டையே வங்குரோத்தாக்கி, நாட்டை நாசமாக்கிய இவர்கள், ஏமாற்றுத் தனமான செயற்பாடுகள் மூலம் மக்கள் அவதானங்களை திசை திருப்ப மீண்டும் முயற்சித்து வருகின்றனர் என்றும், இவர்களின் இந்த போலியான செயற்பாடுகளை கண்டு ஏமாற வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 55 ஆவது கட்டமாக நுகேகொடை புனித ஜோசப் மகளிர் கல்லூரிக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (21) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டை வங்குரோத்தாக்கிய இவர்களுக்கு வரிச்சுமை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்றும், இதுபோன்ற மோசடிக்கார நபர்களின் கதைகளை நம்பி ஏமாறாதீர்கள் என்றும், நாட்டையே அழித்த இந்தக் குடும்பத்தை மையப்படுத்தி ஊழலை ஒழிப்பு வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்நாடு முதலாளித்துவ மேட்டுக் குடி வர்க்கத்திற்கு மட்டுமுரிய நாடு அல்ல என்றும், 220 இலட்சம் மக்களுக்கும் சொந்தமான நாடு என்றும், நாட்டின் எதிர்காலமாக விளங்கும் நாட்டின் பிள்ளைகளை பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது போலவே ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கும் உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் சாப்பிடாமல் மயங்கி விழுந்தாலும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சாப்பிடாமல் மயங்கி விழுவதில்லை என்றும், பாடசாலை மாணவர்கள் இவ்வாறானதொரு அவல நிலைக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில், மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராலும் இதனை புறக்கணிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
Post a Comment