மன்னாரில் மண் அள்ள விடமாட்டேன்:சாள்ஸ்



மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த முயற்சிகளைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட மக்களும், மக்கள் பிரதிநிதிகளும்,சமூக அமைப்புக்களும் சேர்ந்து தடுக்கும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்துக்குள் குறிப்பாக மன்னார் தீவு பகுதிக்குள் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கனிய மணல்களை அகழ்வதற்கான அகழ்வுப் பணியை மேற்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

அது தொடர்பாக தொடர்ச்சியாக நாங்கள் எதிர்ப்பை காண்பித்து வருகின்றோம், 

கொழும்பில் வடமாகாண ஆளுநரை சந்தித்து மணல் அகழ்வு தொடர்பாகவும் மணல் அகழ்வுக்கான ஆய்வு தொடர்பாகவும் எமது எதிர்ப்பை தெரிவித்திருந்தோம்.

மன்னார் தீவினுடைய நில அமைப்பைப் பொருத்தவரையில் இங்கு ஆராய்ச்சியோ அகழ்வோ மேற்கொண்டால் எதிர்காலத்தில் மன்னார் தீவு அழிவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆளுநர் ஏற்றுக்கொண்டர்.

எங்களுடைய தீவு பகுதிக்குள் எந்த விதமான ஆராய்ச்சியோ அகழ்வுப்பணியோ மேற்கொள்ள வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் அரசாங்கத்திற்கு கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் இங்குள்ள மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சமூக அமைப்புகளும் கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கான முழு முயற்சியும் எடுப்பார்கள்." என சாள்ஸ் நிர்மலநாதன்  தெரிவித்துள்ளார்   


No comments