இஸ்ரேல் - காசா போர் இதுவரை 1,600 பேர் உயிரிழப்பு


இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று செவ்வாய்க்கிழமை 4வது நாளாகவும் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பினரிடையே கடந்த சனிக்கிழமை முதல் உயிரிழந்தவர்குளின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேலில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் 900 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 2,600 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் வான்வழித் தாக்குதலில் 900 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 260 குழந்தைகள் மற்றும் 230 பெண்கள் உள்ளனர். மேலும் 4,500 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் இஸ்ரேல் பகுதிகளில் 1,200 வரையான ஹமாஸ் போராளிகளை சுட்டுக்கொன்றுள்ளதாகவும் அவர்களின் உடலங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

காசா முனையில் நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது. 200க்கும் அதிகமான இடங்களில் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடங்கள், இராணுவ டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் நிறுவப்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தாய்லாந்தை சேர்ந்த 11 பேர் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


No comments