பிள்ளையானில் சந்தேகமே!

 


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா கூறியவற்றில் பெரும்பாலும் உண்மைத் தகவல்களே உள்ளன என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் நான் சுகாதார அமைச்சராக இருந்த போது முதலமைச்சராக இருந்த சிவநேசத்துரை சந்திரகாந்தனின் செயலாளராக ஆசாத் மௌலானா செயற்பட்டார்.

ஆனால் அவர் பொய் பேசுவாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னோடு அவர் அப்படி பேசியதும் கிடையாது. அப்போது முதலமைச்சராக இருந்த பிள்ளையானுடன் மிக நெருக்கமாக இருந்தவர். மிக உதவியாக இருந்தார்.

உண்மையில் பிள்ளையான் சிறையினுள்ளே இருந்தபோது அவரை விடுதலை செய்து வெளியில் கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்த ஒரு நபர் ஆசாத் மௌலானா.

இப்போது அவர் சனல் 4 இல் வெளியிட்டுள்ள விடயங்கள், அவருடைய கருத்துக்களை நான் கேட்கின்ற போது அதில் நிராகரிக்க கூடிய வகையில் அந்த கருத்துக்கள் அமையவில்லை.

அவருடைய கருத்துக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஆசாத் மௌலானா சொல்லும் கருத்துக்களையும், நடந்த விடயங்களையும், நான் அறிந்த, கிடைத்த சில விடயங்களையும் வைத்து பார்க்கும் போது ஆசாத் மௌலானாவின் தகவல்களை முழுமையாக நிராகரிக்க முடியாது.

சில சில விடயங்கள் உட்சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவை நிராகரிக்கக் கூடியவாறு இல்லை. ஆசாத் சொன்ன விடயங்களில் நிறைய உண்மைகள் இருக்கின்றது. எனவே அவை உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் தொடர்புபட்டாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஆசாத் மௌலானாவின் கருத்துக்களை வைத்துப் பார்க்கும் போது பிள்ளையானுடன் இணைந்து செய்ததாகத்தான் மௌலானா கூறியிருக்கின்றார் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.



No comments