கசூரினா கடற்கரையில் போதையில் குழப்பம் ; 06 புலம்பெயர் நாட்டவர்கள் விளக்கமறியலில்


மது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் , வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று நேற்று முன்தினம் பொழுதை கழித்துள்ளனர். 

அதன் போது , அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என , கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு , அவர்களுடன் முரண்பட்டுள்ளனர். 

அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 06 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , 06 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடியன் பிரஜைகள் எனவும் , ஒருவர் இலண்டன் பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments