வவுனியா பல்கலையில் பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு ; துணைவேந்தர் மீதும் தாக்குதல்


வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட விளையாட்டு போட்டியின் போது, நீர்குழியில் விழுந்த இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயது மாணவர்களே உயிரிழந்துள்ளனர். 

மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பல்கலைக்கழக துணைவேந்தர்  மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது.

அந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மைதானத்தில் விளையாட்டு போட்டி இடம்பெற்ற போது மைதானத்தின் அருகில் காணப்பட்ட நீர்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.

அதனை அடுத்து பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடி படையினர் அவ்விடத்திற்கு வருகை தந்து பல்கலைக்கழக மாணவர்கள், ஊர் மக்கள் ஆகியோருடன்  இணைந்து குறிந்த மாணவர்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட இரு மாணவர்களையும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர்கள் உயிரிழந்து விட்டனர் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

சம்பவத்தை அறிந்து பல்கலைக் கழகத்திற்கு சென்ற வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன்  மீதும், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பல்கலைகழக மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் துணைவேந்தரை பாதுகாப்பாக பல்கலைகழகத்திற்கு அழைத்து சென்றதுடன்,  பூவரசங்குளம் பொலிஸாரின் பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments