மன்னாரில் மதுபானசாலைக்கு மக்கள் எதிர்ப்பு


மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபான சாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்றைய தினம் செவ்வாய்கிழமை(04) மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

பிரஜைகள் குழு,மகளீர் அமைப்புக்கள்,அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து மன்னார் நகர மத்திய பகுதியில் ஆரம்பித்த போராட்டம் நகர பகுதி ஊடாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் வரை இடம் பெற்றது.

மன்னாரில் கத்தோலிக்க இந்து ஆலயங்கள்,பாடாசாலை மற்றும் அதிக மக்கள் குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும் குறித்த பகுதிக்கு அருகாமையில் வைத்தியசாலை பிரதான வீதி,தனியார் கல்வி நிறுவனங்கள்,மாற்று திறனாளிகள் பாடசாலைகள் என பல தரப்பட்ட பொது நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில் இவ்வாறான மதுபான சாலைக்கு அனுமதி வழங்குவதினால் அப்பகுதியில் விபத்துக்கள்,முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்து குறித்த போரட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

அனுமதி வழங்கும் அதிகாரிகளே மக்களின் அழிவுக்கு துனைபோகாதே,மதுபான சாலை அமைப்பதற்கான அரச சட்டத்தை அமுல்படுத்து,பொருளாதார நெருக்கடி மத்தியில் மதுபான சாலைகள் வேண்டம்,புனித பாதையில் வன்முறை எற்பட வழி வகுக்காதே போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்,இந்து ஆலய குருக்கள்,சட்டத்தரணிகள்,நகரசபை உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மெசிடோ நிறுவன ஊழியர்கள்,மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த போராட்டத்தின் இறுதியில் மதுபான சாலை அமைக்கு திட்டத்தை நிறுத்த கோரியும் மன்னார் நகர பகுதியில் மதுபான சாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்புவதற்கான மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் பிரதேச செயளாலருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments