புத்தூர் தாக்குதல் - கைதான 32 பெண்களுக்கும் பிணை ; 26 ஆண்கள் விளக்கமறியலில்


யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இதுவரையில் கைதான 58 பேரில் 32 பெண்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , 26 ஆண்கள் எதிர்வரும் யூலை 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த 29ஆம் திகதி 25 பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 25 பெண்களும் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் ஏனைய 06 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டு இருந்தது. 

இந்நிலையில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அச்சுவேலி பொலிஸார் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மூவரை கைது செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை 24 பேரை கைது செய்திருந்தனர். 

கைது செய்யப்பட்ட 27 பேரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்படுத்திய வேளை , 07 பெண்களுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் ஏனைய 20 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். 

புத்தூர் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெண்களின் படங்களை கணனி வரைகலை (கிராஃபிக்ஸ்) மூலம் ஆபாச படங்களாக மாற்றம் செய்து, அதனை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊரவர்கள் இணைந்து முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 28ஆம் திகதி இரவு ஊரில் உள்ள இரு இளைஞர்களே அவ்வாறு பெண்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர் என குற்றம் சாட்டி , அந்த இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அத்துடன் வீட்டினுள் இருந்த பெறுமதியான பொருட்களை அடித்து உடைத்தும் , வீட்டின் முன் நின்ற வாகனங்களை அடித்து உடைத்து , அவற்றுக்கு தீ வைத்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சுவேலி பொலிஸார் தாக்குதலில் காயமடைந்த இளைஞர்களை அங்கிருந்து மீட்டு , வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயன்ற போது , பொலிஸாருடன் முரண் பட்டு , பொலிஸார் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அதில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் , நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதனை அடுத்து அங்கு கூடியிருந்த ஊரவர்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி விட்டு , காயமடைந்த இரு இளைஞர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தொடர் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments