ரணிலின் சலுகை மேல் சலுகை



இலங்கை ஜனாதிபதி மேற்கு நாடுகளிற்கு பயணித்துள்ள நிலையில் சலுகைகள் பற்றிய அறிவிப்புக்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

இந்நிலையில் வனவளப் பாதூகாப்பு  திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக வர்த்தமானி ஊடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் விடுவிக்கப்படக்கூடிய சாத்திய நிலையினை அண்மித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, 1985 ஆம் ஆண்டிற்கு பின்னர்இரண்டு திணைக்களங்களினாலும் அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதற்காக துறைசார் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதனடிப்படையில், வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, 1985 ஆண்டு வரையில்,இரண்டு திணைக்களங்களினாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருத்த  காணிகளை வரையறை செய்யும் செயற்பாடுகள் நடப்பு வருட இறுதிக்குள் நிறைவடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், எஞ்சிய காணிகள் அனைத்தையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு கிழக்கு மற்றும் அண்டிய பிரதேசங்களில் யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், காடுகளாக மாறிய பிரதேசங்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இரண்டு திணைக்களங்களினாலும்  பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ் தரப்புக்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றன.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் பிரதேசங்கள் விடுவிக்கப்படும் பட்சத்தில் விவசாயம்,  நீர்வேளாண்மை, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை போன்றவை தொடர்பிலான நெருக்கடிக்கு தீர்வு எட்டமுடியுமென தமிழ் தரப்புக்கள் அண்மையில் ரணிலுடனான பேச்சுக்களில் கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது


No comments