விதுர வீட்டுக்கு போகட்டும்:சாணக்கியன்!




தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்களுக்கு மூளையாக செயற்படும் கலாசார மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பதவி விலக வேண்டும் என இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க அண்மையில் பதவி விலகியிருந்த நிலையில், அவருக்கு பதிலாக விதுர விக்ரமநாயக்க பதவி விலகியிருக்க வேண்டுமென் அவர் கூறியுள்ளார்.

சாதாரண மக்கள் விவசாயத்துக்கு பயன்படுத்திய மற்றும் தற்போது தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு வாழ் மக்களின் மாத்திரமின்றி இலங்கையில் உள்ள அனைத்து மக்களினதும் இடங்கள் விடுவிக்கப்பட வேண்டுமென ரணில் விக்ரமசிங்கவால் கோரப்பட்டிருந்தது.

மக்களின் வாழ்வாதாத்தை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக அனுர மனதுங்க முந்தைய கூட்டங்களில் ரணில் விக்ரமசிங்கவுக்கு உறுதியளித்திருந்தார். எனினும், தற்போது அவற்றை செய்ய முடியாதென கூறினார்.

அதனை தொடர்ந்து, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கிணங்க செயல்பட முடியாத பட்சத்தில் அவர் பதவி விலகுவதை தவிர்த்து வேறு வழிகள் கிடையாதென ரணில் விக்ரமசிங்க கூறினார்.

சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அதிபர் சட்ட நடவடிக்கைகள் எடுப்பாரேயானால், முதலில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு எதிராக எடுக்க வேண்டும்.

அனுர மனதுங்க தவறான தீர்மானங்களை மேற்கொள்ள இடமளித்த மற்றும் வழிகாட்டிய விதுர விக்ரமநாயக்க சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


No comments