ஊடகங்களுக்கு ஒழுக்கநெறி இருக்க வேண்டும்


ஊடக நெறியைப் பின்பற்றும் ஊடகங்களை தற்போது காண முடியாமல் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் ஜனநாயக தூண்களில் இன்று ஊடகம் முக்கிய இடத்தில் இருக்கிறது. எனவே சிறந்த நாடொன்றை கட்டியெழுப்ப ஊடகத்தின் பணி உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் ஊடகத்துக்கு என ஒழுக்கநெறி ஒன்று இருக்கவேண்டும்.

ஒரு விடயத்தினை ஒளிபரப்பு செய்யும்போதும் அது தொடர்பில் பூரண பொறுப்பை அந்த ஊடகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோன்று தனிநபர், சமூகப் பாதுகாப்பை கருத்திற்கொண்டே அவை செயற்பட வேண்டும். ஆனால் அவ்வாறான ஊடக நெறியைப் பின்பற்றும் ஊடகங்களை காண முடியவில்லை.

ஊடக சுதந்திரம் இருக்கவேண்டும். அதற்காக எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பும் சுதந்திரத்தை வழங்க முடியாது.

எனவே இது குறித்த சட்டமூலம் இன்னும் முழுமையாக தயாரிக்கப்படாத நிலையிலேயே சிலர் தவறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடகப் பிரதானிகள் மற்றும் சிவில் அமைப்பினருடன் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments