இரத்த கைகளை கழுவும் கர்தினால்!



முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது இன அழிப்பு அல்லவென வாதிட்டவாறெ தனது இரத்த கறைபடிந்த கைகளை துப்புரவு செய்ய முற்பட்டுள்ளார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை.

கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, ஊழல்களில் ஈடுபட்டுவிட்டு, இன்று தங்களைக் தூய்மையானவர்கள் போலக் காட்டிக்கொள்ள முயல்பவர்களைச் சமூகத்தின் முன்னால் வர நாம் இடமளிக்கப் போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த உண்மைகளை மூடிமறைக்க எவ்வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஆராதனையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2024 செப்டம்பர் ஆட்சி மாற்றத்தின் பின்னர், புதிய ஜனாதிபதி தங்களைச் சந்தித்தபோது இக்குற்றத்தின் உண்மைகளை ஒருபோதும் மறைக்கவிடமாட்டேன் என வாக்குறுதியளித்திருந்தார்.அதற்கமைய, தற்போதைய விசாரணைகள் புத்துயிர் பெற்றுள்ளதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சதித்திட்டம் ஒன்று இருந்தமைக்கான உறுதியான சான்றுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருவதாகப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட பேராயர், அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் மூடிமறைத்த விடயங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன என்றார்.

மேலும், தங்களின் அரசியல் பிம்பம் சிதைந்துவிடும் என்ற அச்சத்தில், இந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் ஊடகங்கள், போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் மூலம் விசாரணைகளைப் பின் தள்ளவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் கைவைக்கவும், சாட்சியங்களை அச்சுறுத்தவும் முயற்சிப்பது அருவருக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அஞ்சாமல் உண்மையை வெளிப்படுத்தும் பணியைத் தொடர வேண்டும் என வலியுறுத்திய அவர், குற்றம் செய்யாதவர்கள் விசாரணைகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும், விசாரணைகளைத் தடுப்பவர்கள் தாங்கள் இக்குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என்பதையே உறுதிப்படுத்துகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, இந்த கொடூரக் கொலை குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் நீதிக்காகத் துணிச்சலுடன் முன்வந்து சாட்சியமளிக்குமாறும், சவால்களுக்கு அஞ்சாமல் உண்மையை நிலைநாட்ட உறுதியுடன் செயற்பட வேண்டும் என்றும் பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments