பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலை நினைவு நாள்

ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின்  14வது ஆண்டு நினைவு கூறலும்  அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்.

18/05/2023  வியாழக்கிழமை பிற்பகல் 14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை, Place Kléber (Homme de Fer) Strasbourg என்னும் இடத்தில் நடை பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.

பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக்கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டது. தமிழினப்படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.

சிறீலங்கா அரசினால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்ற தமிழின அழிப்பைத்தடுத்து நிறுத்தி நீதியைப் பெற்றுத் தரவும் அனைத்துலக  சுயாதீன விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரக்கோரியும் உள்ளடங்கிய மனுகள்  பிரான்சு, ஐரோப்பிய நாடுகளுக்கும்  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலளாருக்கும் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழீழத்தில் மக்கள் எழுச்சிகொண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவு கூர்ந்து முன்னெடுக்கும் நிகழ்வுகளோடு, புலம் பெயர்தமிழ் மக்களும், தமிழக மக்களும் ஒன்றிணைந்து போராடினால் தமிழ் மக்களின் உரிமைகளை விரைவில் பெற்றுக் கொள்ளமுடியும் .

இந்நிலையில் எமது பட்டறிவுகளின் அடிப்படையில் எமது போராட்டங்களைத் தொடர்ந்தும் நடாத்தி, சிறீலங்கா அரசின் அரசியல் நாடகத்தையும் கபடத்தனத்தையும் தமிழின அழிப்பை முன்னெடுக்கும் வெறியையும் உலகறியச்செய்து, தமிழீழ விடுதலைக்கான ஆதரவைத்திரட்டும் வேலைகளைத் துரிதப்படுத்தல் அவசியமாகின்றது.

இன்றுள்ள பூகோள நலன் சார்ந்த அரசியலில் எமது முயற்சிகள் மாத்திரமே எமக்கான விடுதலையைப் பெற்றுத்தரும்.

இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது என்பதையும் தமது தலைவிதியினை  நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக தமிழ் மக்களேஇருக்கின்றார்கள் என்பதையும் சர்வதேசம் விளங்கியுள்ளது. இந்த நிலையில் நீதிக்கான நாட்களை எண்ணி எமது வேலைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பினைக் கொண்டவர்களாக உள்ள நாம் மக்கள் சக்தியாகத் திரண்டு, திறக்கின்ற சர்வதேசத்தின் கதவுகளின் வழியாக, சிறீ லங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசினை  அனைத்துலககுற்றவியல் நீதி மன்றத்திற்குக் கொண்டு செல்லும்  வகையில் எமது போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.

«காலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை» மற்றும் «நீதியின் அடிப்படையில், மனிததர்மத்தின் அடிப்படையில், சத்தியத்தின் அடிப்படையில் நியாயப்பாடு எமது பக்கமாக இருக்கும்பொழுது, நாம் எமது போராட்ட இலட்சியத்தில் உறுதி பூண்டு நிற்க வேண்டும். இலட்சியத்தில் உறுதி பூண்டு இறுதி வரை போராடும் மக்கள்தான் விடுதலையை வென்றெடுப்பார்கள்» என்ற தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்கூற்றுக்களுக்கமைய  இலட்சியத்தில் உறுதி கொண்டு, தேசியத்தலைவரின் வழிகாட்டலில் அனைவரும் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் தமிழ் மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தியும் அறவழிப்போராட்ங்கள்,  அரசியல் சந்திப்புக்கள் என்பவற்றை முன்னெடுத்து விடுதலையை விரைவு படுத்துவோம்.

அறவழிப் போராட்டங்களூடாக நாளாந்தம் எமது வலிகளையும் வேணவாக்களையும் குருதி தோய்ந்த கண்ணீர்களாக சிந்திக்கொண்டிருந்தாலும் அவையனைத்தும்  நாளை மலரப் போகும் தமிழீழத்திற்கு உரமாக  மாறும். தமிழீழம் மீட்கும் வரை, எம் மக்கள் விடுதலை பெறும் வரை ஓயாது எம் போராட்டம் இலக்கினை நோக்கி நகரும்.

No comments