ஆமி கட்டிய விகாரை திறப்பு!

 


வலிகாமம் வடக்கின் தையிட்டிப் பகுதியில், விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டதேயன்றி, அதற்கும் தொல்லியல் திணைக்களத்துக்கும் தொடர்பில்லை என்று தொல்லியல்துறை அமைச்சர் விதுர தெரிவித்துள்ளார்.

இதனிடையே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்ப்புக்களுக்கு மத்தியில் விகாரை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தையிட்டிப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றமாறு கோரி தமிழ் கட்சிகள் பலவும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தின் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ் மற்றும் நான்கு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் தொடர்ந்து நேற்று இரவு முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்று வியாழக்கிழமை அதிகாலை வெளி மாவட்டத்திலிருந்து மக்கள் அழைத்து வரப்பட்டு விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையிலிருந்து பெருமளவிலான பிக்குகள் மற்றும் சிங்கள மக்கள் வருகை தந்திருந்த நிலையில் திறப்பு விழா முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதிகளவான மக்கள் ஒன்று கூடி சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா?, இனப்படுகொலை இராணுவமே வெளியேறு போன்ற எதிர்ப்பு கோசங்களுடன் போராட்டத்தை முன்னெடுத்திருக்க அவற்றினை புறந்தள்ளி விகாரை திறந்துவைக்கப்பட்டுள்ளது.


No comments