சென்னை- பலாலி -கொழும்பிற்குமிடையில் சேவை!



சென்னைக்கும் பலாலிக்குமிடையே தொடர்பாடலை ஏற்படுத்திய இந்திய தூதரகம் தற்போது பலாலிக்கும் கொழும்பிற்குமிடையில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் விமான சேவையினை இந்திய விமானங்கள் மூலம் முன்னெடுக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்திய தூதரக அழுத்தங்காரணமாக சீன நாட்டின், பல்கலைக்கழக மாணவர்களிற்கான புலமைப்பரிசில்களை யாழ்.பல்கலைக்கழகம் நிராகரித்துள்ளது.  இந்நிலையில் கிழக்குப்பல்கலைக்கழகத்திற்கு சீனாவின் யுனான் மாகாண பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தினால் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திசார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதன் அடுத்த கட்டநடவடிக்கையாக சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்துடன் இணைந்து செயற்படவுள்ளமை தொடர்பில் ஆராயும் முகமாகவே, யுனான் மாகாண பிரதிநிதிகள் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் யுனான் மாகாண பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படவுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர், பீடங்களின் பீடாதிபதிகள், மையங்களின் இயக்குனர்கள், கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் உட்பட யுனான் மாகாணம் மற்றும் யுனான் பல்கலைக்கழகம் சார்பில் யுனான் மாகாண அரசின் வெளிநாட்டலுவல்கள் அலுவலக இயக்குனர் தலைமையிலான துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

சீன தலையீட்டிற்கு எதிராக வடக்கில் இந்திய அழுத்தங்கள் தொடர்கின்றபோதும் கிழக்கிலங்கையும் தென்னிலங்கையும் முழுமையான பலாபலன்களை சீன அரசிடமிருந்து பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments