அதானிக்கு மன்னாரில் எதிர்ப்பு!

 


இந்திய தொழிலதிபர் அதானியின் முதலீட்டின் கீழான மன்னார் தீவுப் பகுதியில் அமைக்கப்படவுள்ள  காற்றாலை மின்சாரம் அமைத்தலிற்கு எதிராக தீவுப் பகுதி மக்களின் எதிர்ப்பு வலுத்து வருகின்றது.

இந்நிலையில் காற்றாலை மின்சாரம் தொடர்பில் அரசாங்கத்தால் சூழலியல் தாக்கம் தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அறிக்கை தொடர்பில் பொது அமைப்பு மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அறிக்கையில் மக்களின் பாதிப்பு தொடர்பிலான உண்மைத் தன்மை இல்லை என்பதே மக்கள் பிரதிநிதிகளின் கருத்தாக அமைந்துள்ளது.

2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் மன்னார்  தீவுப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு பல்வேறு தாக்கத்தை செலுத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு, தீவுப் பகுதிக்குள் நிறுவுவதை முற்றாக நிறுத்தும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசின் அறிக்கை தொடர்பில் ஆராயும் நோக்கோடு, 'சூழலியல் நீதிக்கான மையம்' பிரதிநிதிகள் அடங்கிய குழு, கொழும்பிலிருந்து மன்னாருக்கு வருகை தந்து, மன்னர் தீவுப் பகுதி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதனிடையே பூநகரியின் கௌதாரிமுனையில் அமையவுள்ள அதானியின் முதலீட்டின் கீழான காற்றாலைகளிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments