புத்தருக்கும் யாழ்ப்பாண அரிசியில் விருப்பம்!





 வடகிழக்கு தமிழர் தாயகத்தில் பௌத்தமயமாக்கல் முனைப்பு பெற்றுள்ளமை அம்பலப்பட்டுவருகின்ற நிலையில் இலங்கை அரசு மறுபுறம் வெள்ளையடிக்கும் நடவடிக்கைகளில் முனைப்பு காட்டிவருகின்றது.

அவ்வகையில் இலங்கை நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி, அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டி, வெலிமட சதானந்த தேரர், யாழ்ப்பாணம் – ஆரியகுளம் நாகவிகாரையிலிருந்து தெய்வேந்திரமுனைவரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு, நடை பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.

நாட்டில் சமாதானம் ஒற்றுமையினை வலியுறுத்தி நடை பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும், தனது தூரநோக்கமான செயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் குல, மத பேதம் இன்றி ஒற்றுமையாகவும் நிரந்தர சமாதானத்துடன் வாழ வேண்டி பிரார்த்தித்து இன்று காலை நயினாதீவு நாக விஹாரையில் வழிபாடுகளை மேற்கொண்டு, ஆரியகுளம் நாக விகாரையில் இருந்து இலங்கையில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று தெய்வேந்திர முனையில் தனது நடை பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாகவும் வெலிமட சதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம்'  எனும் தொனிப்பொருளில் 56ஆவது தேசிய புத்தரிசி பெறும் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் சாவகச்சேரி கமநல சேவைகள் நிலையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் விவசாயிகளால் அறுவடை செய்த புதிய நெல்லில் இருந்து பெற்ற அரிசி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி அனுராதபுரத்தில் உள்ள மஹா போதியில் வாசம் செய்யும் புத்த பகவானை ஆராதிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் விளைச்சல் அரிசியை கையளிக்குமாறு கமநல சேவை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments