பாதுகாப்பு தரப்பினருக்கே அதிக சம்பளம் ஒதுக்கப்படுகிறது


பேராதனை மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் (48.8 சதவீதம்)  பொலிஸார் மற்றும் படையினருக்கு செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. 

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 69491 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.  இதில் பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க 33940 கோடி ரூபாய் செலவிடப்படும்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தலைமையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரசன்ன பெரேரா மற்றும் கலாநிதி நந்தசிறி கிஹிம்பியஹெட்டி ஆகியோரால் இந்த ஆய்வு  நடத்தப்பட்டது.

ஏறக்குறைய பதினாறு இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் இருப்பதாகவும் அவர்களில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோர் (நான்கில் ஒரு பங்கு) பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார அமைச்சுக்கு அடுத்த அதிகளவான தொகை சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது. அந்தத் தொகை 11800 கோடி ரூபாய்.

அதன் பின்னர் கல்வி அமைச்சுக்கு 5930 கோடியும் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 4274 கோடியும் செலவிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments