மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோரை கௌரவித்த யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம்!


விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதீதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

 சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால் அவதியுறும் இன்னொருவருக்கு உயிர் வாழ சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. அந்த வகையில் மேற்படி சிறுநீரக தானத்தை பெற்றோரின் ஒப்புதலுடன் அவர்கள் விருப்பத்தின் பெயரில் இன்னொருவருக்கு வழங்கியமையால் சிறுநீரக செயலிழப்பினால் அவதியுற்ற ஒருவர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் இன்று சுகமாக வாழ்கின்றார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர்கள் அண்மையில் வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு அவர்களினால் சிறுநீரக குருதி சுத்திகரிப்பு பிரிவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மேலும் 3 சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திர பகுதி திறந்து வைக்கப்பட்டது.

 மேற்படி 3 சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியவர்களுக்கு வைத்தியசாலை சார்பில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நன்றிகளை தொிவித்தார். 

இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் மருத்துவ பீடாதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments