ரணில் - தமிழ் கட்சிகள் நாளை சந்திப்பு!


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை மறுதினம் மாலை 5.30 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்த சந்திப்பு தொடர்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஒற்றை ஆட்சியை கைவிட்டு சமஷ்டி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிக்காமல் பேச்சுவார்த்தைக்கு செல்லப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தனித்தனியாக ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments