கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்டவர்கள் கே,கே.எஸ் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தல்!




யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தத்தளித்த நிலையில் காப்பாற்றப்பட்ட  105  ரோகிங்கியர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில்  14 நாள்கள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பர்மாவில் இருந்து விரட்டப்பட்ட ரோகிங்கிய இன  முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்  இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில்

படகு மூலம் சட்ட விரோதமாக  பயணித்தபோதே   நடுக்கடலில் படகு பழுதடைந்து 3 வாரங்களாக நடுக் கடலில் தத்தளித்துள்ளனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை  இலங்கை  கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  கடற்படையினரின் படகு மூலம்  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட 105 பேரும்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அனைவருக்கும் தோல் ஒவ்வாமை நோய் ஏற்பட்டிருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்திற்கும் சிகிச்சையளிக்கும் நோக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 







No comments