வவுனியாவில் தொடருந்தைக் கடக்க முற்பட்டவர் உயிரிழந்தார்


வவுனியா மெனிக்பாம் பகுதியில் உள்ள தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர், இன்று (04) காலை 7.30 மணியளவில் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

செட்டிகுளம் துடரிக்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மோகனதாஸ் என்ற 55 வயதுடைய குடும்பஸ்தரே விபத்தில் பலியாகியுள்ளார்.

செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விவசாய காணியினை பார்வையிடுவதற்காக மெனிக்பாம் நோக்கி உந்துருளியில்  பயணித்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட நிலையில் மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தொடருந்துடன் மோதுண்டு படுகாயமடைந்திருந்தார்.  

காயங்களுக்குள்ளான அவர், உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments