16 தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு:விரைவாக விசாரணைக்கு !



16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு ககருது தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் விடுதலை புலிகள் போராளிகள் சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் உள்ள 8 விடுதலைப் புலிகள் போராளிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இவர்களின் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரின் வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து,அவற்றை நிறைவு செய்யுமாறு நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

சிறைச்சாலைகளில் வயது முதிர்ந்தோர்,நோய் வாய்ப்பட்டோர் ஆகியோரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் ஒவ்வொருவரின் தகவல்களும் தற்போது கோரப்பட்டுள்ளன.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைக்கு அமைய வயது முதிர்ந்தோர் மற்றும் கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.

No comments