கடலில் மீட்கப்பட்ட அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 

 யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 06 மணியளவில் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்  இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக  பயணித்தபோதே யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்களை கடந்த 17ம் திகதி  இலங்கை  கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு  மறுநாள் 18ம் திகதி கடற்படையினரின் படகு மூலம்  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

அந்நிலையில் கடந்த 19ஆம் திகதி 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன்,104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார். 

அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை  எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

அதனை அடுத்து கடந்த 19ம் திகதி இரவு 8 மணியளவில் 105 பேரையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டனர். 

இந்நிலையில் 105 பேரில் விளக்கமறியல் கைதியான ஒருவரை தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளதுடன் ஏனைய  104 பேரும்  மீரிகானவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

No comments