அரசாங்கத்தை மாற்ற இடமளியேன்: இராணுவத்தை களமிற்குவேன் - ரணில்


அரசாங்கத்தை மாற்றுவதற்காக எவரும் முயற்சித்தால், அதற்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனுமதி  இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசாங்கத்தை வீழ்த்த இடமளிக்க முடியாது. இராணுவத்தை களமிறக்குவேன். அவசரகால  சட்டத்தை அமுல்படுத்துவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என்று ரணில் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை சீராக்கிய பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் எவருக்கும் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்த முடியும். வீதியை நெருக்கடியை ஏற்படுத்தாமல், ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியும்.

எனினும் அதற்காக காவல்துறையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் ரணில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

No comments