எதற்கெடுத்தாலும் போராட்டமாம்!



யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (28) காலை முதல் தீடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்குள் உள்நுழைய முடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் எமக்கு பாதுகாப்பு வேண்டும், நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம், தனியார் பேருந்து குழுவின் அராஜகம் ஒழிக உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய அட்டைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியரை தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்த வெளிமாவட்ட பேருந்துகள், தரிப்பிடங்களுக்கு செல்லாமல் காத்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.


No comments