பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் புலம்பெயர்ந்தவர்கள்!!


சுமார் 60க்கும் மேற்பட்ட இலங்கையின் புலம்பெயர்ந்தோரை விமானம் மூலம் இலங்கைக்கு சொந்த விருப்பத்தின் பேரில் திரும்பி செல்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என்று வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள டியாகோ கார்சியாவில் தங்கவைக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள், தடுப்புக்காவலில் வைக்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம் அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பும்போது துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை, இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்காக, அமெரிக்காவிற்கு இங்கிலாந்து குத்தகைக்கு வழங்கியுள்ளது.

அங்கு புகலிடம் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் பல மாதங்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் மறுவாழ்வு முகாம்களில் இருந்து சென்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

No comments