கிளிநொச்சி போராட்டத்தின் கோரிக்கைகள்!



கையளிக்கப்பட்டும்,சரணடைந்தும்,கடத்தப்பட்டும்,விசாரணைக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் கடந்த 2000 நாட்களாக நீதி இன்றி போராடி வருகின்றோம். ஆரம்பத்தில் இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்த்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனவை சந்தித்து நீதி கோரியபோது அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றியிருந்தார். இதன் காரணமாகவும் சிறிலங்காவின் நீதித்துறையின் ”சிங்களவர்க்கு ஒரு சட்டம், தமிழருக்கு ஒரு சட்டம்“ என்ற இனத்துவேச அணுகுமுறை காரணமாகவும் (உ.ம் கொலை குற்றசாட்டு நீதிமன்றத்தால் நிரூபிக்கபட்ட சிங்கள இராணுவத்திற்கு சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய இராயபக்ச பொது மன்னிப்பு வழங்கி பதவி உயர்வும் வழங்கியுள்ளார். இது போல பல உதாரணகள் உண்டு )  சிறிலங்கா அரசிடம் நீதி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து சர்வதேசத்திடம் மட்டுமே நீதி கேட்டு போராடி வருகிறோம். எம்முடன் இப்போராட்டத்தில் இணைந்திருந்த 138 மேற்பட்ட பெற்றோர்கள்  தமது பிள்ளைகளின் நிலை அறியாமலும், நீதி கிடைக்காமலும் இறந்து விட்டனர். நாமும் எமது வயோதிப காலத்தில் நோய்வாய்ப்பட்டு உடல் இயலாத நிலையிலும்  சர்வதேசத்தில் நம்பிக்கை வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். 


எமது உறவுகளில் பெருந்தொகையானோர் 2009 இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தும், கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், உயிரோடு கையளித்த சரணடைந்த  உறவுகளை இறந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய  இரக்கமின்றி அறிவித்தார். இதில் 29ம் மேற்பட்ட கைக்குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவர். எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதில்  பாதுகாப்புச் செயலராக இருந்து, கட்டளைகளை வழங்கி திட்டமிட்டு  இனவழிப்பை மேற்கொண்டதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தானே பாதுகாப்பு செயலராக இருந்து மனிதகுலத்திற்கு எதிரான யுத்தம் மூலம் தமிழின அழிப்பை மேற்கொண்டவர் இவரே. இவரின் இவ்வளவு அட்டுழியங்களுக்கும் இவரது சகோதரராகிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்து சகல வழிகளிலும் இவ் இனவழிப்பு யுத்தத்திற்கு முழு அதிகாரமும் கொடுத்து முன்னின்று வழிநடத்தினார். இவருக்கு துணையாக இவரது நம்பிக்கைக்குரிய படைத் தளபதிகளும், சிங்கள அதிகாரிகளும் தமிழரை சித்திரவதை செய்து, கொன்று, கற்பழித்து, ஊனமாக்கி,தமிழரின்  சொத்துக்களை  கொள்ளையடித்து  எம் இனத்தை இனவழிப்பு செய்தனர்.


மேற்படி கொடூரங்களைப் புரிந்த சிங்கள அரசுக்கு ஐ.நா வின் தீர்மானம் 30/1  இன் படி பொறுப்புக் கூறலுக்கான கால அவகாசத்தை நீடித்ததன் மூலம் காலம் இழுத்தடிக்கப்பட்டது. இறுதியில் சிறிலங்கா அரசானது தன்னிச்சையாகவே  அனுசரணையிலிருந்து விலகிக் கொண்டது. கடந்க காலங்களிலும் இதையே சிறிலங்கா அரசாங்கம்  (சர்வதேச மத்தியத்துடன் நடைபெற இனப்பிரச்சனைகான அரசியல்  தீர்வு பேச்சுவார்த்தையில் இருந்து சிறிலங்கா அரசு ஒருதலை பட்சமாக விலகியது) தன் யுக்தியாகச் செய்தது.


சிறிலங்கா அரசு பொறுப்புக்கூறும் என்று வீணாக எதிர்பார்த்து காலத்தை மேலும் கடத்தாது தமிழருக்கு இழைத்த அனைத்து குற்றங்களுக்காகவும்  சம்பந்தப்பட்ட அனைவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) நிறுத்தி  நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதுவே ஐ.நா உட்பட்ட சர்வதேசமும் இறந்த பெற்றோர்களுக்கும், வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் வயோதிப பெற்றோராகிய எமக்கும் செய்யக்  கூடிய சர்வதேச நீதியாகும்.


அதுமட்டுமல்ல,1956ம் ஆண்டிலிருந்து இனவழிப்புக்கு  உள்ளாக்கப்பட்ட இனம்  எமது தமிழ் இனம். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்குவதன் மூலம் “மீள் நிகழாமையை” உறுதிப்படுத்த முடியுமே அன்றி காலங்களை கடத்துவதன் மூலம் தீர்வு காண முடியாது. வழங்கப்படும் தண்டனை இனி ஒரு இனவழிப்பு நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும். 


நாம்  தமிழர்களாக எமது அடையாளங்களுடன், சுதந்திரமாக  வாழவே ஆசைப்படுகின்றோம். உண்மையில் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதானால் சம்பந்தப்பட்ட தரப்பின் கோரிக்கை அறியப்பட வேண்டும். எமது தமிழ் பரராளுமன்ற  உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் நமக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக,சுய இலாபமே நோக்காகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் விடயத்திலும், தமிழர் உரிமை (அரசியல் தீர்வு) விடயத்திலும் செயற்படுகிறார்கள். எனவே அவர்களின் கருத்து மக்கள் கருத்தாகக் கணக்கிலெடுக்கப்படாமல்  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட எமது விருப்பே மேலோங்க வேண்டும். 


இந்த போராட்டத்தின் மூலம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்த விரும்புகின்றோம் 


1. எமது வாழ்நாள் முடிவதற்கு முன் நீதியின் தீர்ப்பை காண விரும்புகின்றோம். ஆகவே மஹிந்த, கோத்தபாய உட்பட எம் மீதான இனவழிப்பிற்கு காரணமான அனைவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி தண்டனை வழங்கப்படவேண்டும் 


2. தற்போது தென்னிலங்கையில் ஏற்பட்ட  அரசியல் சூழ்நிலை காரணமாக சிறிலங்காவை விட்டு தப்பியோடிய கோத்தபாய ராஜபக்ஸ, எந்த நாட்டில் ஒளித்திருந்தாலும் சர்வதேச நீதிபொறிமுறையினூடாக கைது செய்து எம்மீது மேற்கொண்ட மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும்  இனவழிப்பிற்காக நீதியின் முன் நிறுத்த சர்வதேசம் முன்வரவேண்டும்.


3. இன்றும் கூட எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான சிங்கள இராணுவமே எமது நிலங்களை ஆக்கிரமித்து நிற்கின்றது. இந்த சிங்கள இராணுவமே எம்மை தொடர்ச்சியாக அச்சுறுத்துவதுடன், தொடர்ந்தும் எம்மை பீதி நிலையிலேயே வைத்துள்ளது. இந்த இராணுவம் உடனடியாக எமது நிலங்களிருந்து அகற்றப்படவேண்டும்.


4. எம் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடர்ந்து சிங்கள பெளத்த அரசானது எமது நிலங்களையும் ஆலயங்களையும் அடாவடியாக அபகரித்து சிங்கள பெளத்த மயமாக்கலை வெகு வேகமாக செய்து வருகின்றது. இந்நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு காணிகள் உரிய சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.


5. சிறையில் தமிழ் அரசியல் கைதிகளாக வாடும் எமது சொந்தங்கள் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.


6. சுயநிர்ணயத்திற்கு உரித்துடைய தமிழ் மக்கள் ஆகிய நாம் எமது அரசியல் தலைவிதியை நாமே தீமானிக்கும் சந்தர்ப்பம் வழக்கப்படவேண்டும். 1948 பெப் 4ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்களிடமும் அவர்களின் வழித்தோன்றல்களிடையேயும் சர்வதேசத்தினால் நடத்தி கண்காணிக்கப்படும் சர்வசன வாக்கெடுப்பு மூலம் நிரந்திர அரசியல் தீர்வு வழங்கப்படப் வேண்டும்.

No comments