எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் மீது பேருந்து மோதியது - ஐவர் படுகாயம்!
மட்டக்களப்பு - கொழும்பு வீதியிலுள்ள ஊறணி பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக எரிபொருளுக்காக வீதியோரத்தில் வரிசையாக காத்திருந்தவர்கள் மீது தனியார் பேருந்து மோதியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன், ஐந்து உந்துருளிகளும் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று (27) காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுகின்றவர்களை செங்கலடி பிரதேசத்தில் இருந்து ஏற்றிக் கொண்டு ஆரையம்பதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்தே மோதியது.
படுகாயமடைந்த ஐவரும், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பேருந்தை காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Post a Comment