போராட அழைக்கிறது ஜேவிபி!



கோட்டாபய-விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் எவரும் பொதுமக்களின் எதிரிகள் என ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவான உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவின் தலைவி சரோஜினி சாவித்திரி போல்ராஜ்,உயிர்ப்பலிகளுக்கு வழிவகுத்த நீண்ட வரிசைகளை விட்டு வெளியேறி, அரசாங்கத்தை கவிழ்க்க முற்போக்கு சக்திகளுடன் சேர வேண்டும் என அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

வாரத்தில் ஐந்து நாட்கள் பாடசாலைகளைத் திறக்க முடியாத இந்த அரசால் என்ன பயன். பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வருவதால் எந்தப் பயனும் இல்லை. நெருக்கடிகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய நிர்வாகத்தை மக்கள் தெரிவு செய்யும் வகையில் அரசாங்கம் பதவி விலக வேண்டும். இப்போது, ​​இந்த அரசாங்கத்திடம் எந்த தீர்வுகளும் இல்லை, ஆனால் பதவி விலக அரசாங்கம் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்கள் வீதிக்கு இறங்கி அவர்களை வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.


ரணில் விக்கிரமசிங்க தாம் நாட்டை காப்பாற்றும் திறன் கொண்டவர் என தெரிவித்துள்ளார். நாட்டுக்கு டொலர்களை சம்பாதிப்பதற்காக அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாக தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். அவர்களால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்றார்.

அமைப்பின் செயலாளர் சமணமலை குணசிங்க தெரிவிக்கையில்

போராட்டங்களில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக போராட பெண்கள் சமையலறைகளை விட்டு வெளியே வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை இந்த நாட்டிற்கு வேறு எந்த நாடும் உதவிகளை வழங்காது. ஆட்சியாளர்கள் மக்கள் பணத்தை திருடியதால்தான் இந்த நெருக்கடி ஏற்பபட்டுள்ளது என்று குணசிங்க கூறினார்.





No comments