முல்லைத்தீவில் எரிபொருள் நிலையத்தின் முன் பதற்றம்


முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்கள வாகனங்களுக்கு மற்றும் பரீட்சை நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்களுக்காக மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கு அமைவாக தலா 6600 லீற்றர் பெற்றோல் நேற்று கிடைத்துள்ளது.

இந்த நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பௌசர்கள் வந்துள்ளதை அறிந்த மக்கள் பெற்றோல் அடிப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் கூடியுள்ளார்கள் இதானல் அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு தொடக்கம் அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளது 

சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் நடவடிக்கை மற்றும் அரச வாகனங்களின் அத்தியாஅவசிய தேவைக்காக இந்த எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாக புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பெற்றோல் தாங்கி பெற்றோலினை  இறக்கிய கையுடன் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை சூழ்ந்துகொண்டுள்ளார்கள். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு கூடி நின்ற இளைஞர்கள் வீதியினை மறிக்க முற்பட்ட வேளை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான  குழுவினர்  நிலைமையினை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எந்த வாகனமாக இருந்தாலும் 500 ரூபாவிற்கு பெற்றோலினை வழங்க தீர்மானித்து மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை இரவில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் பெற்றோல் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது இதனால் பலர் குழப்பமடைந்த நிலையில் திரும்பி சென்றுள்ளார்கள்.

இதையடுத்து இன்று காலை மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் வீதியினை மறித்து போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக  எரிபொருள்  நிரப்ப நிலையத்திற்கு முன்னால் வந்து நிற்பவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

No comments