இலங்கையிலிருந்து தப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது!



இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போலியான பயண ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பவர்களது எண்ணிக்கை அதிகரித்துவருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து போலி விசாக்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட ஐந்து இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்  புறப்படும் ஓய்வறையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் தனது 14 மற்றும் 18 வயதுடைய மகள்களுடன் டோகா கட்டாரின் ஊடாக இத்தாலிக்குச் செல்வதற்காக நேற்று இரவு விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.

அவர்களின் விசா ஆவணங்கள் தொடர்பான சந்தேகம் காரணமாக, அந்தப் பெண் மற்றும் அவரது மகள்கள் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர், மாரவிலயைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட மற்றொரு குடும்பம் விமான நிலையத்துக்கு வந்து டுபாய் வழியாக இத்தாலிக்குச் செல்ல முயன்றது.

35 வயதுடைய தாயின் பயண ஆவணங்கள் மீதான சந்தேகம் காரணமாக, அவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்லவிருந்த புத்தளத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும் தனது பயண ஆவணம் போலியானதாக சந்தேகிக்கப்படுவதால் கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments