வவுனியாவிலும் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!!


சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (05) கண்டன பேரணி மேற்கொண்டனர்.

வவுனியா, காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி, வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக கடைவீதியை அடைந்து கடைவீதியூடாக மணிக்கூட்டுக்கோபுரத்தை வந்தடைந்து, அங்கிருந்து பழைய பஸ் நிலையத்தின சென்றடைந்திருந்தது.

இதன்போது சிறீலங்கா அதிபர் கோட்டாபாய மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான கொட்டொலிகளை மாணவர்கள் எழுப்பினர்.

பேரணி காரணமாக ஏ9 வீதியில் போக்குவரத்துக்கு நொிசல் ஏற்பட்ட போதிலும், போக்குவரத்து காவல்துறையினர் மாற்றுவழியினூடாக வாகனங்களை செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இந்நிலையில், மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக மாணவர்கள் நீண்ட நேரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டமையாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, இப் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் குடிநீர்ப் போத்தல்களை வழங்கி, தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.


No comments