அரசாங்கம் புறக்கணித்தால் மாற்றுவழியே தீர்வு - திஸ்ஸ விதாரண


மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகான அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து செயற்படவேண்டும்.

இல்லாவிட்டால் எமக்கு மாற்றுவழி ஒன்றை தேடிக்கொள்ளவேண்டி வரும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் தனித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதன் பின்னணி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருந்தாலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமைத்தும் எம்மை கண்டுகொள்வதில்லை.

இதுதொடர்பில் நாங்கள் வருத்தமடைகின்றோம். லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் என்றவகையில் கடந்த ஆகஸ்ட் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கடந்த வாரம் வரையும் கட்சி தலைவர்கள் என்ற அடிப்படையில் ஒரு தடவையேனும் ஜனாதிபதியோ பிரதமராே எம்மை அழைத்து கலந்துரையாடியதில்லை. அரசாங்கம் தங்களுக்கு நினைத்த பிரகாரமே செயற்பட்டு வருகின்றது.

அதனால் அரசாங்கத்தில் இருக்கும் 11 பங்காளி கட்சிகளும் ஒன்றிணைந்து இரண்டு வாரங்களுக்கு ஒருதடவை சந்தித்து கலந்துரையாடி வருகின்றோம்.

இதன்போது முக்கியமாக மக்களின் பிரச்சினை, நாட்டின் பொருளாதார பிரச்சினை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கதைக்கின்றோம்.

விசேடமாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எம்மால் முடியுமானவரை முயற்சித்து வருகின்றோம். அரசாங்கத்துக்கு நாங்கள் வழங்குகின்ற அழுத்தங்களுக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டு வந்தால், தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.

அதனால் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கலந்துரையாடல்களுக்கு எம்மையும் அழைக்கவேண்டும்.

அப்போதுதான் எங்களுக்கும் எமது கருத்துக்களை தெரிவித்து, மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணடியும். அவ்வாறு இல்லாமல் அரசாங்கம் தொடர்ந்து எம்மை புறக்கணித்து வருமாக இருந்தால், நாங்கள் மாற்று வழியொன்றை தேடிக்கொள்ள வேண்டிவரும் என்றார்.

No comments