சாட்சியமளிக்கிறார் விமல்!



இலங்கை அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க அமைச்சர் விமல் தயார் என  இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது  தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் நிலையத்தின்  40 சதவீத பங்கினை அமெரிக்க நியூ போர்டேர்ஸ் எனர்ஜி (NFE)   நிறுவனத்திற்கு 250 மில்லியன் டொலருக்கு விற்க ஒப்புக்கொண்டமை   மற்றும் இலங்கைக்கான எல்.என்.ஜி விநியோகத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஏகபோக உரிமைக்கும்  எதிராக உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க   கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தயார் என  இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கைக்கு எதிராக தமது தொழிற்சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை சாட்சிகளாக அழைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

  அண்மையில் கொழும்பில் நடைபெற்ற மக்கள் பேரவையில் எல்.என்.ஜி ஏகபோக உரிமையை அமெரிக்காவிற்கு மாற்றியமைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டார். 

இதேவேளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு கையளிக்க அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த, மனு நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, குமுதினி விக்ரமசிங்க மற்றும் மகிந்த சமயவர்த்தன ஆகியோர் தலைமையில் இன்று(03) ஆராயப்பட்டது.

இதற்கமைய, குறித்த வழக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.

No comments