யாழ்.மாநகரசபையை முடக்கும் சதி மும்முரம்!



யாழ்.மாநகரசபை சீருடை விவகாரத்தினை முன்னிறுத்தி ஆரியகுளம் நிர்மாணப்பணிகளை முடக்க அரசு தயாராகிவருகின்றது.

இதன் ஒரு அங்கமாக யாழ்.மாநகரில் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர காவல் படையின் உத்தியோகத்தர்கள் ஐந்து பேருக்கும் சீருடையை வடிவமைத்துப் பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பயங்காரவாத விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் அலுவலகத்துக்கு இன்று சமுகமளிக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரத்தினை தூய்மையான நகரமாகப் பேணுவதற்காக மாநகர சபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து கடந்த ஏப்ரல் மாதம் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.

எனினும் உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒத்தது என சர்ச்சை எழுந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.



இந்த நிலையில் சீருடையை வடிவமைத்து பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராசா பார்த்திபன் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாகவிகாராதிபதியின் அச்சுறுத்தல்கள் மத்தியில் ஆரிய குள புனரமைப்பில் முன்னின்று செயற்படும் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் பார்தீபனை அச்சுறுத்தவே இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. 


No comments