நிமலின் 21வது ஆண்டு நினைவேந்தல்!



டக்ளஸின் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 21ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (19) அனுஸ்டிக்கப்பட்டது. 

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் , ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

அதன் போது மலர்மாலையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் ஆகியோர் நிமலராஜனின் திருவுரு படத்திற்கு அணிவித்தனர். அதனை தொடர்ந்து மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். 

அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். 

அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments