தமிழ் கைதிகளுக்கு பாலியல் சித்திரவதை - கஜேந்திரன்


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு 540 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 12 தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் மிகவும் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அனுராதபுர சிறைச்சாலைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை ஆடியிருக்கிறார்.

2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைக்கப்பட்டவர்களிடமே இவ்வாறு லொஹான் ரத்வத்தை இவ்வாறு நடந்து கொண்டிருந்துள்ளார். இவர்களுக்கு எதிரான வழக்குகள் எதுவும் விசாரணைக்கு

எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால் 5 அல்லது 6 வருடங்களுக்கு முன்பே அவர்கள் குற்றமற்றவர்கள் எனவிடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் எனவும் அவர் இதன்போது கூறினார்.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் லொஹான் ரத்வத்தை செய்த குற்றச்சாட்டுகளுக்காக அவரின் அமைச்சுப் பதவி பறிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் லொஹான் ரத்வத்தைக்கு துணைநிற்கிறதா? என்கிற சந்தேகம் ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். லொஹான் ரத்வத்தவிடமிருந்து அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு, பாராளுமன்றத்திலிருந்தும் அவரை வெளியேற்றி சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சம்பவம் நடைபெற்று 6 நாள்களுக்குப் பின்னரே சிறைச்சாலைகள் அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றால், 6 நாள்களாக இந்த விசாரணைகளை தடுத்தவர் யார்? எனவும் அவர் இதன்போது வினவினார்.

பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 தமிழ் இளைஞர்கள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி அந்த சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த இளைஞர்களை 29ஆம் திகதி நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளனர்.

540 நாள்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள், பல்வேறு கொடூரமான சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்து உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments