வடமராட்சி: மக்கள் மயப்பட்ட கொரோனா தொற்று!



கொரோனா தொற்று மக்களது விழிப்புணர்வு இன்மையால் வடமராட்சியில் மோசமடைந்துள்ளது.

புதிது புதிதாக தொற்றாளர்கள் கண்டறியப்படுவது தொற்று சமூக மயமாகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 22 வயது இளம் பெண் உள்ளிட்ட இருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் மூன்று நாள்களாக காய்ச்சலுடன் சுகயீனமாக இருந்த நிலையில் இன்று காலை மூச்சு எடுப்பத்தில் சிரமாக இருந்துள்ளார்.

அதனால் இளம் பெண்ணை மந்திகை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அனுமதித்த போது மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் பெண்ணின் மாதிரிகளில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுத்த போது, கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதேவேளை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவர் மந்திகை மருத்துவமனைக்கு அன்புலன்ஸில் அழைத்துவரப்பட்டு வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் சனிக்கிழமை மந்திகை வைத்திய சாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்ற 45 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் , நேற்றும் இருவர் மந்திகை வைத்தியசாலையில் கொரோனோ தொற்றால் உயிரிழந்திருந்தனர்.

நூடளாவிய ரீதியில் முடக்கம் அறிவிக்கப்பட்ட போதும் இரவிரவாக மக்கள் சாதாரணமாக நடமாடுவது யாழில் தொடர்கின்றது.


No comments