சுவிசில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய முதலாம் நாள் ஈருருளிப் பயணம்!


நேற்றைய தினம் (14.05.2021) காலை பாசல், செங்காளன், கிளாறூஸ் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழீழ விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கத்துடனும், உறுதிமொழியுடனும் மூன்று குழுக்களாக ஆரம்பமாகிய மனித நேய ஈருருளிப்பயணமானது இன்று மாலை சூரிச் மாநிலத்தை  வந்தடைந்ததோடு; சூரிச் மாநிலத்தில் தமிழின அழிப்பு சார்ந்த கவனயீர்ப்பு நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

சிங்களப்  பேரினவாத அரசினால் தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு சார்ந்தும் அதற்குரிய சாட்சியங்கள் அடங்கியதுமான மகஜர்;  பாசெல் (BS), பாசெல் லான்ட் (BL)  மற்றும் கிளாரூஸ் (GL)  மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் அமைந்துள்ள மாநகரசபை உத்தியோகத்தர்களிடன் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக விடுதலை ஓர்மத்தோடு தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும், எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும்  பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணமானது  நாளை (15.05.2021) காலை சூரிச் மாநிலத்தில் இருந்து தொடர் கவனயீர்ப்புடன் சுக் மாநிலத்தைச் சென்றடையவுள்ளதனால் இன உணர்வாளர்கள் அனைவரும் மாநில ரீதியாக மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு வலுச்சேர்க்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.


No comments