பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம் கண்டனம் !



முள்ளிவாய்க்கல் இன அழிப்பு நினைவுச்சின்னத்தினை இடித்தழித்த ஈனச்செயலுக்கு வன்மையான கண்டனத்தை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

உலகில் இந்த நூற்றாண்டில் நடத்தப்பட்ட மிகப் பெரும் இன அழிப்பு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பாகும். இக் கொடூர இனழிப்பில் அநியாயமாக அழிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூற அமைக்கப்ட்டிருந்த நினைவுத்தூபி கடந்த இரவு (12.05.2021) இடித்தழிக்கப்ட்டிருப்பது மிகவும் மிலேச்சத்தனமானதும் சமகால நாகரீக உலகில் எந்தவோர் சராசரி அல்லது சர்வதிகார அரசும் செய்யத்துணியாத மிக ஈனத்தனமான இழிசெயலாகும். நவீன  காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்தின் வெளிப்பாடாகிய இவ் இன வன்முறை வெறியாட்டத்தை எண்ணி இன்றைய ஆட்சியாளர்கள் வெட்கித்தலைகுனியவேண்டும்.

 

நேற்றைய நாளில் மிகவும் அமைதியான முறையில் நாட்டின் சட்ட ஒழுங்குமுறை சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஒருசில அருட்தந்தையர்கள் இணைந்து முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் நடுகல்லினை நடுவதற்கு முற்பட்டவேளை அங்கு திரண்ட பொலிசாரும் இராணுவத்தினரும் நடுகல்லினை பதிக்கவிடாது முரண்பட்டும் அருட்தந்தையர்களை அச்சுறுத்தியும் பெரும் குழப்பத்தினையும் பதட்டத்தினையும் ஏற்படுத்தினர். இன்நிலையிலும் அங்கிருந்த அருட்தந்தையர்கள் மிகவும் நிதானத்துடனும் பண்புடனும் அப்பாவி மக்களை நினைவு கூறுவதற்காக ஏற்பாடுகளே தவிர வேறொன்றுமில்லை, இது சாதாரண அடிப்படை மானிட உரிமை என எவ்வளோ வினயமாக எடுத்துக்கூறியும் அதைக் கேட்காத பொலிசாரும் இராணுவத்தினரும் அருட்தந்தையர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இராணுவத்தினர் அப்பிரதேசமெங்கும் குவிக்கப்பட்டனர். இதன் பின்னரே இரவில் நினைவுத்தூபி இடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இவ் ஈனத்தனமான இழிசெயலை யார் செய்தார்கள் என்பதும் ஏன் செய்தார்கள் என்பதும் தெட்டத்தெளிவாக நிரூபணமாகியுள்ளது.இன அழிப்பிற்கு பதினொரு வருடங்கள் கழிந்தும் எவ்வித நீதியும் கிடைக்காது ஏக்கத்துடனும் கலக்கத்துடனும் வேதனையுடனும் இருக்கும் ஈழத்தமிழினத்திற்கும் இச்செயலானது வெந்த புண்ணில் வேலைப்பாச்சியது போல உள்ளத்தில் ஆறாத ரணமாக மாறியுள்ளது.  இறந்தவர்களை கூட நினைவு கூற அனுமதியளிக்காதவர்கள் வாழ்பர்களுக்கு உரிமைகளை கொடுப்பார்களா? நினைவுச்சின்னங்களே இருக்க அனுமதிகாதவர்கள் மக்களின் வாழ்வுரிமையை அங்கரிப்பார்களா? இவர்களிடம் நீதியையும்  உரிமையையும்  எப்படி எதிர்பார்ப்பது? இதனால்தான் சர்வதேசத்தை நோக்கி ஈழத்தமிழினம் குரலெழுப்புகிறது.


எனவே இவ் ஈனத்தனமான இழிசெயலுக்கு எமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு இவ்வாறான செயற்பாடுகள் இனிமேலும் நடக்காதபடி நீதிக்காகவும் மானிட நேயத்துக்காவும் உண்மைக்காகவும் ஒன்றிணைந்து செயற்படுமாறு சர்வதேச சமூகத்தையும், மானிடநேய செயற்பாட்டாளர்களையும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றதென தெரிவித்துள்ளது.


No comments