கிளிநொச்சி:தொடங்கியது மாகாணசபை ?

 


மாகாண சபை தேர்தல் அறிவிப்பு இன்னமும் வெளிவராத போதும் தமிழரசுக்கட்சி கிளிநொச்சி அலுவலகம் சூடுபிடித்துள்ளது.

கடந்த மாகாணசபை கதிரையிலிருந்தவர்களை கழற்றிவிட சி.சிறீதரன் முடிவெடுத்துள்ள நிலையில் இளஞர்கள் பேரில் கழமிறக்க அவர் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளார்.

ஆனாலும் கதிரை ருசி அவர் தயாரித்துள்ள பட்டியலில் உள்ளவர்களை வெளியே விடப்பட்டவர்கள் போட்டுக்கொடுக்க நான்காம் மாடி வரை சிறீதரன் பட்டியல் வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணை தூள்பறந்துவருகின்றது. 

இதனிடையே ராஜபக்ஸ பரம்பரை அரசியல் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுவது சம்பந்தமாக எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எந்த முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், எப்போது நடத்தப்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்தால் நாங்கள் அந்த மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

குறிப்பாக மாகாண சபை என்பது வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாகவே கொண்டு வரப்பட்டது. அந்த அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

அது என்ன முறையில் நடத்தப்பட வேண்டும், எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதற்கு அப்பால், விரைவாகவும் வேகமாகவும் அந்த மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

தேர்தலை நடத்தி உடனடியாக மாகாண சபைகளில் அதிகாரப் பரவலாக்கல், அதன் ஊடான மக்கள் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இம்மாதம் 19ஆம் திகதி தீர்மானிக்கின்ற திகதியென்பது பலமுறை அவர்களால் சொல்லப்பட்ட செய்திகள். இன்னுமின்னும் அதன் காலம் இழுத்தடிக்கப்படலாம். காலத்தை இழுத்தடிக்காமல் உடனடியாக முடிவு எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

விரக்தி அடைந்திருக்கின்ற சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக கட்டாயம் வாக்களிப்பார்கள். அந்த வாக்களிப்பு என்பது இந்த அரசை கட்டாயம் ஆட்டம் காணச்செய்யும்.

அவர்களின் அரசியல் பாரம்பரியம் அல்லது பரம்பரை அரசியல் என்பது கேள்விக்கு உட்படுத்தப்படும் என்ற பயத்தின் காரணமாகவே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த பின்னடிக்கின்றது எனவும் சிவஞானம் சிறீதர் தெரிவித்தார்.



No comments