அண்ணனிடம் கிடைக்காதது தம்பியிடமா கிடைக்கும்??



இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை ஆணையகம் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை சமாளிக்கும் வகையில், கண் துடைப்பிற்காக இந்த ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கிறார்.

ஐநா மனித உரிமை ஆணையகத்தை சமாளித்து, மீண்டும் கால அவகாசம் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

இலங்கைக்கு எதிராக கடும் தொல்லை தரும் சர்வதேச மேகங்கள் சூழ்கின்றமையினாலேயே, இலங்கை ஜனாதிபதி இவ்வாறான ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

உள்நாட்டிற்குள்ளேயே தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய செயற்பாட்டை இந்த அரசாங்கம் முன்னெடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

அதன் மூலமாக இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையரைக்கு அப்பால் சென்று, பல்லின, பல்மொழி, பன்மத நாடு என்ற அடிப்படையை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்குமானால், இத்தகைய கடுமையான சர்வதேச நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய தேவைப்பாடு இலங்கைக்கு இருந்திருக்காது எனவும் அவர் தெரிவிக்கிறார்.

இன்று நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என மனோ கணேசன் கூறுகின்றார்.

அதனால், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு ஒரு கண்துடைப்பு என அவர் கூறுகிறார்.

இதற்கு முன்னர் இலங்கையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் கூட, கண்துடைப்பு ஆணைக்குழுக்களாகவே இருந்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில், அவரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, மிக சிறந்த, முற்போக்கான பரிந்துரைகளை முன்வைத்திருந்ததாக கூறிய அவர், அந்த பரிந்துரைகளை கூட "அண்ணன் ஜனாதிபதி செயல்படுத்தவில்லை" என அவர் தெரிவிக்கிறார்.

"இந்நிலையில், இன்று தம்பி ஜனாதிபதியிடம் அதனை எதிர்பார்க்கவே முடியாது" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆகவே, இது கண்துடைப்பு என்பதே தனது உறுதியான நிலைப்பாடு என மனோ கணேசன் தெரிவிக்கிறார்.

No comments