இலங்கை கடற்படை மோதி உயிரிழந்தவர்களுள் ஈழ ஏதிலியும்?



இலங்கை கடற்படையினால் டோறா படகு மூலம் மோதி கொல்லப்பட்ட மீனவர்களுள் ஒருவர் ஈழ ஏதிலி மீனவரென கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினால் மோதப்பட்டுள்ள உயிரிழந்த  நான்கு  மீனவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனக் கண்டறியப்பட்டுள்ளதோடு மீட்கப்பட்ட உடல்களில் அவருடையதும் ஒன்று எனவும் தெரியவருகின்றது.

இலங்கை கடல் எல்லைப் பரப்பில் திங்கட் கிழமை இரவு மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ஓர் ட்ரோலர் படகினையும் அதில் பயணித்த நான்கு  மீனவர்களையும் காணவில்லை என இந்திய மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை இலங்கை கடற்படையினரால் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட இரு சடலங்களும் செல்வம் செந்தில்குமார்(வயது 35)  மற்றும் சாம்சன்  டர்வின்(வயது 28) ஆகியோரது சடலமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. 

இதேநேரம் குறித்த படகில் பயணித்த நான்கு மீனவர்களில் ஒருவரான சாம்சன் டர்வின்   என்பவர் இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் மண்டபம் முகாமில் தங்கியுள்ள நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக கூலித் தொழிலிற்காக மீன்பிடியில் ஈடுபட்டவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 


No comments