அடுத்து கிளிநொச்சிக்கு வருகிறார் புத்தர்?



முல்லைதீவை தொடர்ந்து கிளிநொச்சி பக்கம் இலங்கை அரசின் கவனம் சென்றுள்ள நிலையில் உருத்திரபுரம் சிவன் கோவில் அகழ்வாராச்சிக்கான மதிப்பீடுகள் பூர்த்தி, ஆலய சூழலும் நேற்றைய தினம் பார்வையிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே  முல்லைத்தீவு குருந்தூர்மலை மற்றும் படலைக்கல்லு ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கான பூர்வாங்கச் செயல்பாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு தமிழ் மக்களின் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன என சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் விகாரை அமைக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் அபாயமுள்ளது என சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் போது யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார்ந்தவர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் அரசியல், சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் முக்கிய கலந்துரையாடல் நாளை திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தரப்பு துறைசார்ந்தவர்களை குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சிகளின் போது ஈடுபடுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.




No comments