அனுமதியின்றி கட்டப்பட்ட பலாலி வைத்தியசாலையை அகற்றுவோம்!


வலி. வடக்கில் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் கட்டப்படும் இராணுவ வைத்தியசாலையை பிரதேச சபை இடித்தழிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் காணியில் பிரதேச சபையின் எவ்வித அனுமதியும் இன்றி , இராணுவத்தினர் தமக்கான வைத்தியசாலையை கட்டி வருகின்றனர். 

குறித்த காணிகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பிரகாரம் அவை இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணியாக காணப்படுவதால் , அதில் தாம் வைத்தியசாலையை நிர்மாணிப்பதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். 

2013ஆம் ஆண்டு கால பகுதியில் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீள பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் , அக்காணிகள் இராணுவ தேவைக்கு சுவீகரிக்கப்பட்ட காணி என இராணுவத்தினர் வைத்தியசாலையை நிர்மாணித்து வருகின்றனர். 

எது எவ்வாறாயினும் , ஒரு கட்டடம் கட்டுவதற்கு , அப்பகுதி உள்ளூராட்சி சபையிடம் உரிய அனுமதிகளை பெற வேண்டும். அனுமதிகளை பெறாது கட்டப்படும் இராணுவ வைத்தியசாலை கட்டட பணிகளை நிறுத்துமாறு , வலி.வடக்கு பிரதேச சபையினால் உரிய முறையில் அறிவித்தல்கள் இராணுவ தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

பிரதேச சபையின் அறிவுறுத்தல்களையும் மீறி இராணுவத்தின் ,வைத்தியசாலை கட்டி வருகின்றனர். 

அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கான உரித்து பிரதேச சபைக்கு உள்ளது. அதனால் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டத்தை அகற்றும் நடவடிக்கையை பிரதேச சபை முன்னெடுக்கும் என மேலும் தெரிவித்தார். 

No comments