மகிந்தவிற்கு தமிழ் மக்களில் அக்கறை:திஸ்ஸ!



விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்கும் போது அப்பாவித் தமிழ் மக்களுக்குர் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று மகிந்த விசேட ஆலோசனைகளைப் படைகளுக்கு வழங்கியதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இதேவேளை இனப்பிரச்னைக்குத் தீர்வாக சர்வகட்சித் தலைவர் குழு எடுத்த தீர்மானங்களை உத்தேச புதிய அரசமைப்பு தொடர்பிலான குழுவினரிடம்  லங்கா சமசமாஜ கட்சி சார்பில் முன்வைக்கவுள்ளோம். சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய இனங்கள் மத்தியில் உள்ள அடிப்படைவாதிகளை தூண்டிவிட்டு அரசியல்வாதிகள் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.இந்நிலை மாற்றமடைந்தால் மாத்திரமே நாடு முன்னேற்றமடையும். 

புதிய அரசமைப்பு உருவாக்கம், தமிழ் தரப்பு கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் பல்லின சமூகம் வாழும் நாட்டில் ஒரு இனத்தின் உரிமைகள் அரசமைப்பின் மூலம் முடக்கப்படும் போது அங்கு பிரிவினைவாதம் தோற்றம் பெறும் என்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பு மாத்திரமல்ல அதற்கு முற்பட்ட கால அரசமைப்புக்கள் கூட முரண்பட்ட தன்மையிலும், பிற இனத்தின் உரிமைகளை முடக்கும் வகையிலும் காணப்பட்டன.

30 வருட கால சிவில் யுத்தம் தோற்றம் பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். தவறான நிர்வாகம், எல்லை மீறிய அதிகாரப் பிரயோகங்கள் என்பன விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெறுவதற்கு பிரதான காரணியாக அமைந்தது.

பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டன. இதற்கு சர்வதேச நாடுகளின் சுயநலபோக்கும் ஒரு காரணியாக இருந்தது.


நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, 2005 ஆம் ஆண்டு அரசாங்கத்தைப் பொறுப்பேற்றார்.


பாராளுமன்றத்தை அங்கீகரித்த அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வகட்சிக் கூட்டத்தில் பங்குப்பற்றின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. 20 தொடக்கம் 25 வரையான கூட்டங்கள் இடம்பெறும் போது அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேசப்பட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி சர்வகட்சித் தலைவர் கூட்டத்திலிருந்து வெளியேறியது.


சர்வகட்சித் தலைவர் குழுவின் அறிக்கை யுத்தம் முடிவடைந்ததுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட்டது.


மாகாண மட்டத்தில் முழுமையான அதிகாரப் பகிர்வு, உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் அதிகாரப் பகிர்வு மற்றும் இனங்களுக்கிடையிலான சம அதிகார வழங்கல் என்ற பிரதான மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

இவற்றை அக்காலக்கட்டத்தில் செயல்படுத்த உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்தின.


இனப்பிரச்னைக்கு தீர்வாக சர்வகட்சிக் குழுவின் தீர்மானங்களை செயல்படுத்துவது பொருத்தமாக அமையும் என்பதே  லங்கா சமசமாஜ கட்சியின் நிலைப்பாடாகும்.


உத்தேச புதிய அரசமைப்பின்  நிபுணர் குழுவிடம் இவ்விடயங்களையே முன்வைப்போம். இனப்பிரச்னைக்கு புதிய அரசமைப்பின் மூலம் தீர்வு காண்பது அவசியமாகும்.


மூன்று இன மக்கள் மத்தியிலும் அடிப்படைவாதிகளும், இனவாதிகளும் உள்ளனர். இவர்களை அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் தூண்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.


இந்த நிலைமை மாறினால் மாத்திரமே நாடு முன்னேற்றமடையும். வரலாற்று ரீதியில் செய்து கொண்ட தவறுகளை இம்முறை திருத்திக்கொள்வது கட்டாயமாகும்- என்றார்.


No comments