கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்புடன் செயற்படுங்கள்

 


யாழ். குடாநாட்டு மக்கள் கொரோனா சமூகத்தொற்று தொடர்பாக விழிப்புடன் செயற்படுங்கள் எனவும் பொது இடங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்து பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுங்கள் எனவும் யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச அலுவலகங்கள் வழமைபோன்று இயங்கும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு நடைமுறைகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் - 19 நிலைமை தொடர்பில் யாழ். குடாநாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவித்தலிலேயே அரச அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு, கம்பஹா மாவட்ட, மினுவாங்கொட, திவிலபிட்டிய பகுதிகளில் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கு கொரோணா தொற்று இனங் காணப்பட்டதையடுத்து நாடு பூராகவும் சுகாதார அமைச்சு, கொரோனா தடுப்பு செயலணியினால் கொரோனா தொற்றினை தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இந்த சந்தர்ப்பத்தில் யாழ் மாவட்ட பொதுமக்கள் அவதானமாக செயற்பட்டு தங்களை தாங்களாகவே பாதுகாத்துக் கொள்ள முன்வரவேண்டும். அநாவசியமற்ற நடமாட்டங்களை தவித்து வீடுகளில் இருப்பதோடு வீதிகளில் பயணிக்கும் போது மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பேணுவதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.


கொரோனா எந்த உருவில் எங்கே, எப்போது தொற்றும் என யாருக்கும் தெரியாது. எனவே இந்த தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாப்பதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்.


மேலும், புங்குடுதீவு பகுதிக்கு மினுவாங்கொட பகுதியில் இருந்து வருகை தந்தோர் தொடர்பில் சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எனவே பொதுமக்கள் தங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தாங்களாகவே முன்னெடுக்கவேண்டும். பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.


அலுவலகங்கள் வழமைபோல் செயற்படும். எனினும் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments