புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்?


தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமதுஅமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு வலியுறுத்தியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.


இந்த வருட ஆரம்பத்தில் மொகிதின் யாசினுக்கு கடிதமொன்றை அனுப்பி வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


புத்ராஜெயாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும்,


“தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்குவது மலேசியாவுக்கு நல்லது. மேலும், ஏனைய நாடுகளைப் போல மலேசியாவும் எந்தவொரு குழுவையும் பயங்கரவாதிகள் என சுலபமாக முத்திரை குத்திவிடக் கூடாது.


நான் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்களுடைய பிரச்சினை இலங்கையில் இடம்பெற்ற ஒன்று. மலேசியாவுக்கு அதில் தொடர்பில்லை. அத்துடன், மலேசியாவில் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாதபோது அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.


மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை இலங்கை அரசே பயங்கரவாத இயக்கம் என்று பட்டியலிடாத போது, மலேசியா ஏன் அந்த இயக்கத்தைத் பயங்கரவாத பட்டியலில் வைத்திருக்க வேண்டும்.


இன்றைய மலேசிய பிரதமரும் அண்மையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவரை உள்துறை அமைச்சராக இருந்தவருமான மொகிதீன் யாசினுக்கு எழுதிய கடிதத்தில், புலிகள் இயக்கத்தை இன்னமும் பயங்கரவாத பட்டியலில் வைத்திருப்பதற்கான காரணம் ஏதும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தேன். ஆகவே, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குவது மலேசியாவுக்கு நல்லது என கடிதத்தில் வலியுறுத்தி இருந்தேன்” – என்றார்.

No comments