வீட்டை கைவிட்டு மக்கள் மீனிடம் வந்துள்ளார்கள்?


இதுகாறும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் எல்லாம் இப்பொழுது மீன் சின்னத்திற்கு மாறி வருகின்றார்கள். காரணம் வீட்டார் கொள்கை தவறிவிட்டார்கள். அவர்கள் மனதில் பொதுநல சிந்தனைகள் குறைந்து இப்பொழுது சுயநல சிந்தனைகளே மேலோங்கி நிற்கின்றன. நேரத்திற்கு நேரம் அவர்களின் பேச்சுக்கள் மாறிவருகின்றன. சந்தர்ப்பவாதிகளாக வீட்டார் இப்பொழுது வலம் வருகின்றார்கள். என தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன்.  


கூட்டமைப்பினதும் கூட்டணியினதும் அடிப்படை அரசியல் சிந்தனைகள் ஒரே விதமாக இருப்பதாகத் தென்பட்டாலும் இதுவரையில் வீட்டார் அவை பற்றி நடந்து கொண்ட முறை எமக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது. அவர்கள் தமது விஞ்ஞாபனங்களில் தமிழர் உரிமைகள் பற்றிப் பேசினாலும் அவர்களின் நடைமுறை நடத்தைகள் சலுகை அரசியலுக்கும் ஏமாற்றுகளுக்கும் விலை போவதாக அமைந்துள்ளன. 

'நக்குண்டார் நாவிழந்தார்' என்ற பழமொழி கேட்டிருப்பீர்கள். இன்னொருவரிடம் பல்லிளித்து சலுகைகளைப் பெற்றுக் கொண்டால் எம்மால் அவர் செய்யும் வேறு பிழையான காரியங்கள் சம்பந்தமாக மாற்று நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் போய்விடும். நாவிழந்து விடுவோம். மௌனிகள் ஆகிவிடுவோம். 

சலுகைகள் தருபவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் திட்டமிட்டே உதவிகளை எங்களுக்குத் தருகின்றார்கள். உதாரணம் ஒன்றைக் கூறுகின்றேன். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்த போது ஒரு நாடு அவர்களிடம் கடன் வேண்டுமா என்று கேட்டது. மிகக் குறைந்த வட்டியில் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் தருவோம் என்று அவர்கள் கூற ,லங்கை பாரிய கடன் வாங்கியது. அப்பணத்தில் பல மாட மாளிகைகள் கட்டினார்கள். கூட கோபுரங்கள் கட்டினார்கள். ஏதோ தங்கள் பணத்தில் கட்டுவது போல் ஜம்பமுடன் இராங்கியுடன் பொருளாதார விருத்தியை நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. ஆனால் நடந்தது என்ன? கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை வந்ததும் நாட்டின் சில பகுதிகளை குறித்த வெளிநாட்டுக்கு இப்போது அடகுவைத்துள்ளார்கள். இந்த வெளிநாடு தென்கிழக்கு ஆசியா, ஆபிரிக்க நாடுகள் யாவற்றிலும் ,வ்வாறு தான் நாடு பிடித்து வருகின்றது. 
நாம் சலுகைகளைப் பெற விழையும் போது வருங்காலத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இல்லையேல் நாம் ஒரு பொறிக்குள் அகப்பட்டுக் கொள்வோம். இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பொறிக்குள் அகப்பட்டு தத்தளிக்கின்றது. பொறிக்குள் அகப்பட்ட அது மரண பயத்தில் இருந்து கொண்டு தான் இப்போது தேர்தலில் வாக்குகள் கேட்கின்றது. 

அவர்களை இனியும் நீங்கள் மேலும் கஷ;டப்பட வைக்க வேண்டியதில்லை. 

தம்பி பிரபாகரன் அன்று தொடங்கிய கூட்டமைப்பு போய் இன்று அது கூட்டணியாக மாறியுள்ளதை நீங்கள் ஏற்று எமக்கு ஆகஸ்ட் ஐந்தாம் திகதி தவறாது வாக்களிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். வாக்களிப்பது எப்படி என்றும் கூறிவிடுகின்றேன். இம் முறை வாக்குப் பதிவுச்சீட்டு மிக நீளமானது. 33 கட்சிகளின் பெயர்கள் அதில் அடங்குகின்றன. அவற்றுள் 14 சுயேட்சைக் கட்சிகள். இந்த சுயேட்சைக் கட்சிகள் யாரோ சிலரின் அரசியல் சூழ்ச்சிகளின் பிரதிபலிப்பு. அவற்றையும் கூட்டமைப்பு உள்ளடங்கலாக அரசாங்கங்களுக்கு முண்டு கொடுக்கும் கட்சிகளையும் நீக்கினால் இரண்டே இரண்டு கட்சிகள் தான் மிஞ்சும். அவற்றில் ஒன்று எங்களுடையது. மற்றையது வயது வராத, முதிர்ச்சி பெறாத, வாதம் ஒன்றே வாழ்க்கை என்று வாதாடும் சைக்கிள் கட்சி. அதற்குக் காலம் இருக்கின்றது. அதைத் தவிர்த்து அந்த வாக்குச் சீட்டில் மீன் சின்னத்தைத் தேர்ந்தெடுங்கள். சுமார் பத்தாவதாக மீன் சின்னம் இருக்கும். அதற்கு எதிராக ஒரு புள்ளடி போடுங்கள். ஏன நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments